சென்னை: மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதியை முன்னிட்டு இன்றும், நாளையும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொஹரம் பண்டிகை (29ம் தேதி) மற்றும் வார இறுதியை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி மற்றும் ஜூலை 29ம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் பொது மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மேற்படி விடுமுறையை முடித்து பொது மக்கள் மீண்டும் மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஜூலை 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூலை 31ம் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.