முதுமலை புலிகள் காப்பக கணக்கெடுப்பில் அழியும் பட்டியலில் 21 ஊர்வன இனங்கள் கண்டுபிடிப்பு

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் ஊர்வன இனங்களில் அழியும் பட்டியலில் 21 இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை ஊர்வன மற்றும் நீர் மற்றும் நிலத்தில் வாழ கூடிய இருவாழ்விகளும் உள்ளன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக விளங்க கூடிய முதுமலை புலிகள் காப்பகத்தில் ஹெர்பெட்டோபவுனா எனப்படும் ஊர்வன மற்றும் இருவாழ்விகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் 15 நிபுணர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் எம்.டி.ஆர் ஊழியர்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் விரிவான ஹெர்பெட்டோபவுனா கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் உள்ள கல்லம்பாளையம் முதல் 2000 மீட்டர் உயரம் வரை உள்ள சோலூர் வரையிலான பகுதியில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் 33 ஊர்வன இனங்கள் மற்றும் 36 நிலம் மற்றும் நீர்வாழ்விகள் இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஏற்கனவே விபூதிமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டவையுடன் சேர்த்தால் முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது மொத்தம் 55 ஊர்வன இனங்கள் மற்றும் 39 இருவாழ்விகள் இனங்கள் உள்ளன. இதில் சுமார் 40 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு சொந்தமானவை. பதிவு செய்யப்பட்ட இனங்களில் 21 இனங்கள் அழியும் பட்டியலில் உள்ளதாக ஐயுசிஎன்., எனப்படும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மிகவும் அழியும் பட்டியலில் உள்ள கேவ் டேன்சிங் பிராக் (தவளை), இன்டரநெயில் நைட் பிராக் ஆகியவை உள்ளன. இதுதவிர அழியும் நிலையில் உள்ள எண்டெமிக் ஸ்டார் ஐட் புஷ் பிராக் (தவளை), நீலகிரி எண்டெமிக் குனூர் புஷ் பிராக் (தவளை), நீலகிரி புஷ் பிராக் (தவளை), நீலகிரிஸ் வார்ட் பிராக் (தவளை) ஆகியவை வனப்பகுதிகளிலும் புல்வெளிகளிலும் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

மேலும் பெட்டோம் லீப்பிங் பிராக் (தவளை), சுகந்தகிரி லீப்பிங் பிராக் (தவளை) ஆகியவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஊர்வன வகைகளான எண்டெமிக் ஸ்டிரிப்டு கோரல் பாம்பு, கிங்கோப்ரா, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மலபார் பிட் வைப்பர், தி கலமரியா ரீட் பாம்பு, எண்டெமிக் பரோவிங் பாம்பு, பெரோடெட் மலைப்பாம்பு, நீலகிரி டிவார்ப் கெக்கோ, கிரேஸ்புல்டே கெக்கோ உள்ளிட்டவைகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கர் முதலைகள் பதிவு செய்யப்பட்டது. தற்போதைய கணக்கெடுப்பின் மூலம், மழை உள்ளிட்ட மாறுபட்ட காலநிலைகளின் போது, அடுத்து மேற்கொள்ளும் ஆய்வுகளில் கூடுதலாக உயிரினங்களை கண்டறிய உதவிகரமாக இருக்கும். மேலும் எதிர்காலத்தில் அவற்றை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வதற்கான உத்திகளை வகுப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related posts

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்

மதுரை ஏர்போர்ட் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்