ஊத்துக்கோட்டை: வடமதுரை எம்டிசி நகர் பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடக்கும் புதர்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் வடமதுரை ஊராட்சி மற்றும் பனப்பாக்கம் ஊராட்சி இடையே எம்டிசி நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் எம்டிசி நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி கடந்த 2017-18ம் ஆண்டு ரூ.3.50 லட்சம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். அதன் பிறகு பஸ் நிறுத்தத்தில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த பேருந்து நிறுத்தம் முன்பு புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் பயணிகள் பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை கண்டு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே எம்டிசி நகர் பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.