சிறையில் இருந்தாலும் இவர்கள் மக்களவை எம்பியாக பதவிப்பிரமாணம் செய்ய நேரில் வர அரசியலமைப்பு உரிமை உண்டு. இதற்காக சிறைத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கலாம். அதே சமயம் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து டெல்லி சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கைதி, நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள நீதிமன்ற அனுமதி தேவை. அவர்களை சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ்த்திலான அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். அப்போது அவர்கள் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.