Tuesday, July 2, 2024
Home » அடுத்த மாத தொடக்கத்தில் மபியில் முதல் கூட்டு பொதுக்கூட்டம்: இந்தியா கூட்டணி அறிவிப்பு

அடுத்த மாத தொடக்கத்தில் மபியில் முதல் கூட்டு பொதுக்கூட்டம்: இந்தியா கூட்டணி அறிவிப்பு

by Karthik Yash

புதுடெல்லி: அடுத்த மாத தொடக்கத்தில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் முதல் கூட்டு பொதுக்கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இக்கூட்டணியின் 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நேற்று நடந்தது.

இதில், சரத் பவார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சமாஜ்வாடியின் ஜாவேத் அலிகான், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சாதா, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, பிடிபி கட்சியின் மெகபூபா முப்தி, சிவசேனா உத்தவ் அணியின் சஞ்சய் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரசின் கே.சி.வேணுகோபால் கூட்டறிக்கையை வெளியிட்டு கூறுகையில், ‘‘தொகுதி பங்கீடு செயல்முறையை தொடங்க ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. எனவே, விரைவில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டணியின் கூட்டு பொதுக்கூட்டங்கள் நடத்த ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கூட்டம் அக்டோபர் முதல் வாரத்தில் மபியின் போபாலில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், பாஜ அரசின் தவறான கொள்கைகளால் நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் ஆகிய பிரச்னைகளை எழுப்புவோம். மேலும் இதில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* சென்னையிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கூட்டத்தின் முடிவில் திமுக எம்பி டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில், ‘‘மக்களவை தேர்தலை கவனத்தில் கொண்டு, மாநில உறுப்பினர்கள் தங்களது பணியை தொடங்க வேண்டுமென கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நாடு முழுவதும் 6 மாநகரங்களில் நடத்தப்படும். அதில் தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் கூட்டம் நடத்தப்படும். எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுப்பார். இந்தியா கூட்டணியை பொருத்தமட்டில் தற்போது 5 மாநில தேர்தலுக்கு முன்னுரிமை வழங்கி அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது’’ என்றார்.

You may also like

Leave a Comment

15 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi