போபால்: மத்தியபிரதேசம் அமர்வாரா பேரவை உறுப்பினரான கமலேஷ் பிரதாப் ஷா நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன் மனைவி, சகோதரி ஆகியோருடன் பாஜவில் சேர்ந்தார். கடந்த ஆண்டு மத்தியபிரதேச பேரவை தேர்தலில் சிந்த்வாரா மக்களவை தொகுதிக்குள்பட்ட அமர்வாராவில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா வெற்றி பெற்றார். இவர் 2013, 2018 மற்றும் 2023 ஆகிய பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக அமர்வாரா பேரவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கமலேஷ் பிரதாப் ஷா நேற்று மத்தியபிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் மாநில தலைவர் விஷ்ணு தத் சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜவில் ஐக்கியமானார். அவருடன் அவரது மனைவியும், ஹர்ராய் நகர் பாலிகா தலைவருமான மாத்வி ஷா மற்றும் கமலேஷ் ஷாவின் சகோதரியும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான கேசர் நேதம் ஆகியோரும் பாஜவில் சேர்ந்தனர்.