Monday, July 1, 2024
Home » ம.பி. சிறுமி பலாத்காரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் சிக்கினார்

ம.பி. சிறுமி பலாத்காரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் சிக்கினார்

by Ranjith

உஜ்ஜைன்: ம.பி.யில் சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் பாரத் சோனியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள உஜ்ஜைன் நகரில் 12 வயது சிறுமி ரத்த காயங்களுடன் கடந்த திங்கள்கிழமை உதவி கேட்டு இரண்டரை கி.மீ. தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் பதிவான சிசிடிவி. கேமரா பதிவுகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் பாரத் சோனியை கைது செய்த மகாகால் போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.

இது தவிர, சிறுமி பாலியல் குறித்து மேலும் 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தன்னை யார் என்று அடையாளம் கூற முடியவில்லை. அவரது பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்களை சொல்ல தெரியவில்லை. மனநல ஆலோசகர் கலந்துரையாடியதில் அவர் சட்னா மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சட்னா மாவட்டத்தில் உள்ள ஜைத்வாரா காவல் நிலையத்தில் கடந்த 25ம் தேதி குழந்தையை காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரில் உள்ள சிறுமி இவர் தானா என்பதை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உஜ்ஜைன் எஸ்பி சர்மா தெரிவித்தார்.

* சிறுமிக்கு பிச்சை போட்ட மக்கள்
வழி நெடுகிலும் ஆபத்தில் இருப்பதாகவும் யாரோ தன்னை பின் தொடர்வதாகவும் கூறி உதவி கேட்ட சிறுமிக்கு யாரும் உதவவில்லை. ஆனால் சிறுமிக்கு பிச்சை போட்டுள்ளனர். போலீசார் சிறுமியை மீட்ட போது அவரிடம் ரூ.120 இருந்தது. பின்பு ஆசிரமத்தை அடைந்த சிறுமிக்கு அங்கிருந்த பூசாரி ஆடை கொடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* பாஜ ஆட்சியில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை
காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், “மகாகாலேஷ்வர் கோயில் அமைந்துள்ள உஜ்ஜைன் நகரில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஆன்மாவை உலுக்குகிறது. மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ அரசில் சட்டம், ஒழுங்கு முற்றும் சீர்குலைந்துள்ளது. சிறுமிகளுக்கும், பெண்களுக்கும், தலித்துகள், பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பில்லை. சிறுமிகளையும், பெண்களையும் பாதுகாக்க முடியாத பாஜ அன்பு சகோதரி என்று பேசுவதால் என்ன பயன்?” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

seventeen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi