திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 2 குழந்தைகளின் தாயை வெட்டிக் கொலை செய்த கள்ளக்காதலன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பாலைக்கல் பகுதியை சேர்ந்தவர் ரீஜா (45). சில வருடங்களுக்கு முன் கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த ரீஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரமோத் (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பிரமோத்தின் வீட்டுக்கு ரீஜா அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற ரீஜா பின்னர் வீடு திரும்பவில்லை. அதேபோல் பிரமோத்தின் வீட்டிலும் ஆள்நடமாட்டம் இல்லை. எனவே இதுகுறித்து ரீஜாவின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக பிரமோத்தின் வீட்டுக்கு சென்றனர். காணாமல்போன ரீஜா அந்த வீட்டுக்குள் கையிலும், கழுத்திலும் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பிரமோத் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரீஜாவை வெட்டிக்கொன்று பிரமோத் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து காட்டக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.