காஞ்சிபுரம்: மசூதி உண்டியல் பணம் தொடர்பாக அவதூறு பரப்பிய காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளர் செல்வம் கைது செய்யப்பட்டார். மசூதியில் வசூலான உண்டியல் பணத்தை எண்ணும் காட்சிகளை கடந்த 7ம் தேதி செல்வம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். வீடியோவில் இஸ்லாமிய மசூதியில் எண்ணப்படும் பணம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தம் என்றும், இந்துக்கள் கோயிலில் வரக்கூடிய பணம் அரசாங்கத்துக்கு சொந்தம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு மற்ற மதங்களை சார்ந்தவர்கள் பதில் அளிக்கும் வகையில் ஆக்ரோஷமாக கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதனால் இரண்டு மதங்களை சார்ந்த மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையிலும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் கருத்து தெரிவித்து அவதூறு பரப்பியதாக செல்வம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. முபாரக் பாட்ஷா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் மீது காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் அவதூறு பரப்பியது உறுதியானதால் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளருமான செல்வம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.