மூணார் பகுதியில் சாலையில் நடமாடிய படையப்பா யானை: கார்களில் வந்தவர்கள் அலறியடித்து ஓடும் காணொளிக் காட்சி வெளியீடு

கேரளா: கேரள மாநிலம் மூணார் பகுதியில் சாலையில் நடமாடிய படையப்பா யானையால் கார்களில் வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். மூணாறிலிருந்து கல்லாறு சென்று கொண்டிருந்த உள்ளூர் வாசிகள் தங்கள் பகுதிக்கு செல்லும் போது எதிரில் படையப்பா யானையானது வந்துள்ளது. வழக்கம் போல் யானை வாகனங்களை பார்த்தால் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் செல்லும் போது யானையானது தொடர்ந்து எதிரில் வந்து கொண்டிருந்த காரணத்தினால் இவர்கள் வந்த வாகனத்தை பின்னோக்கி எடுத்து சென்றனர்.

குறுகிய பாதை என்ற காரணத்தினால் இரு கார்களும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் வந்த நபர்கள் யானையை பார்த்து பயந்து கார்களை விட்டு வெளியேறி ஓடினர். அத்தகைய காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நிகழ்வின் போது ஒரு காரில் இருந்த ஓட்டுநர் சதீஷ் சாதூரியமாக காரை பின்னோக்கி எடுத்து யானை தொடர்ந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்ததால் படையப்பா யானை மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது.

கார்களில் இருந்தவர்கள் அனைவரும் மீண்டும் கார்களில் ஏறி பயணித்தனர். படையப்பா யானையானது வனத்துறை கண்காணிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அது சிறிது காலத்திற்கு வனப்பகுதிக்குள் சென்று விட்ட காரணத்தினால் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்காமல் இருந்தனர். தற்போது மீண்டும் படையப்பா யானை சாலையில் நடமாடிவருவதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்