இதையடுத்து கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அவர் பேசியதாவது: பேரிடர் காலத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல் துறையில், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றுள்ள காவல் துறை அலுவலர்கள் கண்டறிந்து, அவர்களை மீட்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மீட்பு பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ளும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினை தேவையான இடங்களில் முன்கூட்டியே நிலைநிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ள நீர் தேங்கும் நேர்வுகளில் பாதிப்பிற்கு உள்ளாகும் முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பேரிடர் அனுபவங்களை கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும், தன்னார்வலர்களைக் கண்டறிந்து, அவர்களை பேரிடர் காலங்களில் ஈடுபடுத்தும் வகையில், உரிய பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள், காவல் துறை, ராணுவம், விமானப்படை, கப்பல்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புபடை உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்களும், தொலைதொடர்பு துறை, எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.