திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் பேசியதாவது, ‘‘கடந்த 2015ல் எனது தந்தையும், 2022ல் எனது தாயும் இறந்து விட்டனர்.
தற்போது எனக்கு தாயும், தந்தையும் இல்லை. அதிமுக கூட்டணி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு தாயாகவும், தந்தையாகவும் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் 2 அப்பாக்கள் உள்ளனர்’’ என உணர்ச்சி பொங்க பேசினார்.இதை கேட்டு மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசன் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினார். பின்னர் சமாளித்து கொண்டு கண்ணீரை துடைத்தார். இதை பார்த்த அதிமுக தொண்டர்கள் ‘அண்ணே இளகின மனசுக்காரர்ப்பா’ என தங்களுக்குள் நெகிழ்ச்சி அடைந்தனர்.