திருப்பூர்: பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயண நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதாகவும், விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாகவும் இருந்தது. ஆனால் தற்போது நிறைவு விழா அடுத்த மாதம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் பிப்ரவரி 18, 20, 24 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் தேதி கிடைத்த பின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் என்று பாஜ மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த பொதுக்கூட்டம் மோடியின் தேர்தல் பிரசாரம் துவக்கம் கூட்டமாக அமைய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பாஜவினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜ மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கூறுகையில், ‘அண்ணாமலை இதுவரை தமிழகம் முழுவதும் 168 தொகுதிகளுக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மாதப்பூரில் நடைபயண நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்ய தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வார இறுதியில் பிரதமர் மோடி வர வாய்ப்புள்ளது. அவரது வருகையை பொறுத்து தேதி முடிவு செய்யப்படும். 100 சதவீதம் பிரதமர் மோடி வருகை எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.