மிரட்டல்கள் மூலம் உருவாக்கப்பட்ட மோடியின் ஆட்சி விரைவில் கவிழும்: மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் கணிப்பு

கொல்கத்தா: மிரட்டல்கள் மூலம் உருவான பாஜ ஆட்சி விரைவில் கவிழும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினர்.  மம்தா பானர்ஜி முன்பு காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தபோது, கடந்த 1993ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் உயிரிழந்தனர். பின்பு காங்கிரசில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய மம்தா பானர்ஜி, ஆண்டுதோறும் ஜூலை 21ம் தேதியை தியாகிகள் தினமாக கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவின் தர்மதலா என்ற இடத்தில் நேற்று நடந்த தியாகிகள் தின பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி பாஜ தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இப்படி மிரட்டல்களால் உருவாக்கப்பட்ட பாஜவின் 3வது ஆட்சி நீடிக்காது. நிலையற்ற பாஜ அரசு விரைவில் கவிழும்” என ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியின் வெற்றி பாராட்டுக்குரியது. சமாஜ்வாடியின் வெற்றி உத்தரபிரதேச பாஜ அரசை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் வெட்கமற்ற பாஜ அரசு, ஒன்றிய அமைப்புகள், பிற வழிகளை பயன்படுத்தி வெட்கமின்றி ஆட்சியில் நீடிக்கிறது” என்று காட்டமாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் வகுப்புவாத சக்திகள் சதிகள் மூலம் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. இந்த வகுப்புவாத சக்திகள் எந்த விலை கொடுத்தாவது ஆட்சியில் நீடிக்க விரும்புகின்றன. வகுப்புவாத அடிப்படையில் நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திகள் தற்காலிக வெற்றியை சுவைக்கலாம். ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். ஒன்றிய பாஜ அரசு விரைவில் கவிழும்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

 

Related posts

சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு