ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பது தான் மோடி ஆட்சியின் லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு முறைகேடு காரணமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய தேசிய தேர்வு முகமை என்பது தனிப்பட்ட சங்கமாக மட்டுமே செயல்படுவதால் இது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் நடைபெறும் தவறுகள் மற்றும் ஊழலுக்கு யார் பொறுப்பேற்பது? இந்த முகமையின் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் தேசிய தேர்வு முகமை தலைவராக இருக்கிற பிரதீப்குமார் ஜோஷி தான். இவர் ஏற்கனவே மத்தியபிரதேச மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து 40 பேரை பலியாக்கிய வியாபம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் சம்மந்தப்பட்டவர். அப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர் தான் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருக்கிறார்.

இவரை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் பாஜக பாதுகாத்து வருகிறது. நீட் ஊழலுக்கு பொறுப்பேற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய தேசிய தேர்வு முகமையின் தலைவர் பிரதீப்குமார் ஜோஷியே நீட் ஊழலை விசாரிக்கிற பொறுப்பையும் ஏற்றிருப்பது மிகவும் விசித்திரமாகவும், விந்தையாகவும் இருக்கிறது. ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரே ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமிக்கப்பட்டிருப்பது தான் மோடி ஆட்சியில் ஊழலை ஒழிப்பதன் லட்சணமாகும். நீட் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலமே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு