தூத்துக்குடி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மோடி களமிறங்கினால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளனர். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்ப் பதவியை அப்துல் கலாமிற்கு கொடுத்தனர். இந்நிலத்தில் சிறுபான்மையினருக்கு தேவைப்படுவது உரிமை மட்டுமே. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அப்போதுதான் என்னை நீங்கள் நம்புவீர்கள்’’ என்றார்.