சென்னை: நான் பிரதமர் மோடியை திட்டாத திட்டா… அந்த டிவிட்களையே நான் இதுவரை டெலிட் செய்யவில்லை, பதிவு பண்ணியது பண்ணியதுதான், பயந்து பின்வாங்கமாட்டேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு, ஐதராபாத்தில் இருந்து நேற்று மதியம் விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: என்னுடைய டிவிட்டில் மிகத் தெளிவாக போட்டிருக்கிறேன். காங்கிரசார் என் வீட்டு முன்பு போராட்டம், முற்றுகை என்றெல்லாம் அறிவித்தனர். நேற்று வருவதாக கூறியிருந்தனர். ஆனால் ஒருவர் கூட வரவில்லை. யாராவது வந்தாலும் சந்திக்க தயாராக இருந்தேன். இப்போது திங்கள் கிழமை வருவதாக கூறியிருக்கின்றனர். அப்படி வந்தாலும் சந்திக்க தயார். நான் வீட்டில் இல்லாத நேரம், எனது மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் தான் இருந்தனர். ஆனாலும் தமிழ்நாடு போலீசார், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். எனவே போலீசுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
வேளச்சேரி என்பதற்கு என்ன அர்த்தம். வேள ஏரி அல்ல. வேளச்சேரி தான். அதேப்போல் அரசு ரிக்கார்டிலும், அந்த வார்த்தை உள்ளது. எனவே நான் பேசியதில் தவறு இல்லை. இதனால் நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். நான் பேசியது ஒன்று, ஆனால் அதைத் திரித்து தவறுதலாக கூறுகின்றனர். தற்போது போட்டுள்ள அந்த டிவிட்டை நீக்கப்போவது இல்லை. நான் இதுவரை போட்டுள்ள எந்த டிவிட்டையும் நீக்கியது கிடையாது. நான் பிரதமர் மோடியை திட்டாத திட்டா… அந்த டிவிட்களையே நான் இதுவரை டெலிட் செய்யவில்லை. அந்த டிவிட்களை எல்லாம், எப்போதும் எடுத்து போட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் பதிவு பண்ணினால் பண்ணினது தான். பயந்து கொண்டு பின்வாங்கும் ஆள் கிடையாது. இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.