புதுடெல்லி: டெல்லியில் ஞாயிறன்று நடந்த ஆம் ஆத்மியின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு 5 கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,‘‘பிரதமர் மோடி மற்றும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டை எங்கே கொண்டு செல்கின்றது என்பது கவலை அளிக்கிறது. இதேபோல் பாஜவின் அரசியலும் இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்கின்றது.
இது தொடர்ந்தால் நமது நாடு மற்றும் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அரசியல் அமைப்புக்களை உடைக்கவும், எதிர்கட்சிகள் தலைமையிலான அரசுகளை கவிழ்க்கவும், மத்திய அமைப்புக்களை பயன்படுத்தும் பாஜவின் அரசியலுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா? ஊழல் தலைவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதை நீங்கள் ஏற்கிறீர்களா? எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் 75வயதில் ஓய்வு பெற்றனர். அது போல ஓய்வுபெறும் வயது குறித்த ஆர்எஸ்எஸ்-பாஜவின் விதி பிரதமர் மோடிக்கும் பொருந்துமா? பாஜ தலைவர் ஜேபி நட்டா தனது கட்சிக்கு ஆர்எஸ்எஸ் தேவையி ல்லை என்று கூறிய போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? இந்த கேள்விகள் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் உள்ளது. இது குறித்து சிந்தித்து பதில்களை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.