Wednesday, July 3, 2024
Home » பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசு தான் : மக்களவையில் திமுக எம்.பி.ஆ ராசா ஆவேசம்

பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசு தான் : மக்களவையில் திமுக எம்.பி.ஆ ராசா ஆவேசம்

by Porselvi

டெல்லி : 8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டதாக திமுக எம்.பி.ஆ.ராசா தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக எப்படி கூறமுடியும். அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டார் இந்திராகாந்தி. பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை; குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கின்றனர். பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் கொண்டவையாக உள்ளன. பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக, அவசரநிலையை பற்றி பேச அருகதையில்லை.பாஜக ஆட்சியில் பட்டியல், பழங்குடியினர், சிறுபான்மையினர் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து இங்கு வந்துள்ளேன். திராவிட மண்ணில் பாசிச பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 10 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் மெரிட், மேனேஜ்மெண்ட், பேமண்ட் என 3 -பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஒன்றிய அரசு நினைப்பதை குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலம் நிறைவேற்றுகிறது.

ஒவ்வொருவரும் அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜக வலியுறுத்துகிறது. எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர்; ஆனால் இன்று நான் ராகுலுடன் அவையில் இருக்கிறேன்; அதற்கு காரணம் பெரியார். நிறுவனங்களின் லாபம் மீதான வரியை 33%-லிருந்து 20%ஆக குறைத்துவிட்டது மோடி அரசு. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை 2 பேர் வாங்குகிறார்கள், 2 பேர் விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விற்று வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டையும் மறைமுகமாக ஒழிக்கிறீர்கள்.

முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், ஆசியர்களும் அந்தியர்கள்தான். முகலாயர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றால், ஆரியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்தான். அதானி குழும முறைகேடு பற்றி 50 நாட்கள் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை. ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசுதான். அரசியலமைப்பை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என முழங்கியவர்கள், பிரதமரானவுடன் அதை எடுத்து வணங்கினார்கள். அரசியல் சாசன சபையில் உயர்சாதியினர்தான் அமர்ந்திருக்கின்றனர் என்று சைமன் கூறினார். பாஜக அரசியல் சட்டத்தை பின்பற்றுவதும் இல்லை, மதிப்பதும் இல்லை. ,”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi