நெல்லை: மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நெல்லையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு தமிழக மீனவர்கள் மீது தொடர் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் இந்நாள் வரை தமிழக மீனவர்கள் மீது துப்பாகி சூடு நடத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டால் ஒன்றிய அரசின் வெளியுறத்துறை மூலம் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படகுகள் எல்லை தாண்டி செல்லாத வகையில் அனைத்து மீனவர்களின் படகுகளிலும் நவீன எச்சாிக்கை கருவி பொருத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பூத் கமிட்டி அளவிலான கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். 2026ல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும். கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது பாஜவின் நிலைப்பாடாக உள்ளது. கோயில்களில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்க இதுதான் நல்ல தருணமாகும். இவ்வாறு தெரிவித்தார்.