பாகல்பூர்: அரசியல் வியூக நிபுணர் மற்றும் ஜன் சுராஜ் கட்சி தலைவரான பிரசாந்த் கிஷோர் பீகாரின் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரசாந்த் கிஷோர், ‘‘நிதிஷ்குமாருடன் கடந்த காலங்களில் பணியாற்றிய நான் இப்போது ஏன் விமர்சிக்கிறேன் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவரது மனசாட்சி விற்பனைக்கு வைக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் தலைவர் என்பது அம்மாநில மக்களின் பெருமை. ஆனால் பிரதமர் மோடியின் பாதங்களை தொட்டதால் பீகாருக்கு நிதிஷ்குமார் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்திற்கான நன்மைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தவில்லை. 2025ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் பாஜ ஆதரவுடன் அவர் தொடர்ந்து ஆட்சியில் உறுதி செய்வதற்காக மோடியின் கால்களை தொடுகிறார்” என்றார்.