விருதுநகர்: பாஜ ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் மாதம் தொடங்கி ஓராண்டுக்கு நாடு முழுவதும் கொண்டாடப்படும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு யுத்தமாகும். மோடியின் ஆட்சி அகற்றப்பட்டால்தான் நாடு காப்பாற்றப்படும். அவரது தலையிலான பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற நாம் பாடுபட வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இவ்வாறு முத்தரசன் கூறினார்.