மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரத்தை நெருங்கும் நிலையில் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்காதது ஏன்? : காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் பிரதமர் மோடி உட்பட பாஜவை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சிகள் சார்பில் 11 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரத்தை நெருங்கும் நிலையில் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சரவை இலாகா பங்கீடு தொடர்பாக கூட்டணியில் நிலவும் குழப்பமே இதற்கு காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கமாக அமைச்சரவை பதவியேற்று சிறிது நேரத்தில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்படும். ஆனால்,மோடி அரசு பதவியேற்று சுமார் 20 மணி நேரத்தை நெருங்கும் நிலையில் இதுவரை அமைச்சரவைக்கான இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை. இணை அமைச்சர் பதவியை அஜித் பவார் கட்சி ஏற்காததால் மோடி பதவியேற்புக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

பதவியேற்ற சிறிது நேரத்தில் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கட்சித் தலைமையிடம் கூறிவிட்டதாக சுரேஷ் கோபி கூறியதும் சர்ச்சையானது.விரைவில் அமைச்சரவையிலிருந்து, தான் விடுவிக்கப்படுவேன் என்று பேட்டி அளித்த சுரேஷ் கோபி, விமர்சனம் எழுந்ததால் முடிவை மாற்றிக் கொண்டார். இதனிடையே சபாநாயகர் பதவி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெலுங்கு தேசம், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் தயவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால், கிங் மேக்கர்களாக விளங்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் வேளாண்துறை, ரயில்வேதுறையை என முக்கிய இலக்காகளை தங்களுக்கு கேட்டு பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மேலும் மஜத அமைச்சர் குமாரசாமியும் வேளாண் துறை தனக்கு வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்