Saturday, September 28, 2024
Home » பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!

பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!

by Porselvi
Published: Last Updated on

டெல்லி : பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற தேர்தல் ஆணையம் தயங்குவதாக விமர்சனம் எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், “தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மாங்கல்யத்தை கூட விடமாட்டார்கள். மன்மோகன்சிங் சொன்னபடி, சிறுபான்மையினருக்கு தான் நாட்டின் சொத்தில் முதல் உரிமை என்றால், அந்த நகைகளை யாருக்கு கொடுப்பார்கள். அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு, ஊடுருவல்காரர்களுக்குதான் அந்த நகைகள் தரப்படும், “இவ்வாறு பேசினார். இதையடுத்து மதம், சாதி, சமுதாயம், மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசும் பேச்சுக்கு கட்சி தலைவர்களே பொறுப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77-வது பிரிவு கூறுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் நடவடிக்கைக்கு அந்தந்த கட்சி தலைவர்களே பொறுப்பு என்ற அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கட்சியின் உயர்நிலையில் உள்ளவர்கள் பேசும் பேச்சால் தீவிர விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற தேர்தல் -ஆணையம் தயங்குவதாக விமர்சனம் எழுந்துள்ளது. வழக்கமாக சர்ச்சை பேச்சு குறித்து தொடர்புடைய நபர்களுக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பி வந்தது தேர்தல் ஆணையம். ஆனால் தற்போது பிரதமர் மோடி பேசியதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் பா.ஜ.க.வுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபருக்கு பதில் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதல்முறை ஆகும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டினை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், “தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க.வின் பி டீமாக மாற்றிவிட்டார்கள். மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு தைரியம் இல்லை. மோடிக்கு பதில் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் ஆணையம் நடுநிலைமையாக செயல்படவில்லை என்பது உறுதி ஆகியுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

eight − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi