Sunday, June 30, 2024
Home » மதத்தின் பெயரால் மோடி பிரச்சாரம் செய்கிறார்; பாஜகவால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

மதத்தின் பெயரால் மோடி பிரச்சாரம் செய்கிறார்; பாஜகவால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

by Neethimaan

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்; 40 ஆண்டுகளாக காங்கிரஸ் பேரியக்கத்தில் பயணிக்கக் கூடியவர் வைத்திலிங்கம். எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, சட்டப்பேரவை தலைவராக 2 முறை முதலமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். வைத்திலிங்கத்தை 2-வது முறை நாடாளுமுன்றத்துக்கு மக்கள் அனுப்ப வேண்டும். புதுச்சேரியின் முன்னேற்றத்துக்காக காங்கிரசும் திமுகவும்தான் பாடுபட்டுள்ளன.

புரட்சிகர திராவிட இயக்கத்தையும் புதுச்சேரியையும் பிரிக்க முடியாது. கலைஞருக்கு தமிழ்நாடும் புதுச்சேரியும் ஒன்றுதான். புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்தது பா.ஜ.க. புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை நின்றவர் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. அரசியல் சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போல ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் கம்பீரமாக நடைபோடும். மாநில உரிமை மட்டுமல்ல யூனியன் பிரதேச உரிமைகளும் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும். ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி வெற்றிபெற்ற பிறகு நிச்சயமாக நிறைவேறும். ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 விழுக்காட்டில் இருந்து உயர்த்த சட்டம் இயற்ற காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்கு ஆக்கப்படும். ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம் வழங்கப்படும். மாநிலங்களுக்கும் நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கிற தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மக்களை ஏமாற்ற நானும் ஓ.பி.சி. என்று கூறுகிறார் மோடி.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விலையை விற்று லாபம் பார்த்தது ஒன்றிய அரசு. ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கியவர்கள் பொதுமக்களுக்கு அதன் பயனை அளிக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்டினால்போதும் என்று ஆட்சி நடத்தும் பா.ஜ.க. ஆட்சியை அகற்ற வேண்டும். கிரண்பேடி காமெடிகள் முடிந்தபிறகு ஒருவர் வந்தார், தமிழிசை வந்தார். புதுச்சேரியில் வந்து அமர்ந்துகொண்டு தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருந்தார் தமிழிசை.

புதுச்சேரியை பெஸ்ட் ஆக்குவேன் என்று சொன்னார், செய்தாரா மோடி?. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் ரிபோர்ட் கார்டு எங்கே? பா.ஜ.க.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுத்தாரா மோடி?. புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது புதுச்சேரியில் ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்துவிட்டு பா.ஜ.க. பம்மாத்து ஆட்சி நடத்தி வருகிறது.

புதுச்சேரியில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, அங்கு வேலை செய்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறிக்கவிட்டு வேடிக்கை பார்த்த ரங்கசாமி எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்கிறார்? இவ்வாறு கூறினார்.

You may also like

Leave a Comment

six − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi