புதுச்சேரி: மோடி பிறந்த தேதி சொல்லி வருஷத்த சொல்லவில்லை என கூறி பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1000 பரிசை தன் பாக்கெட்டில் புதுச்சேரி பாஜ அமைச்சர் போட்ட சம்பவத்தை பெண்கள் கிண்டலடித்தனர். புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் மற்றும் காக்கையன்தோப்பு கிராம பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடற்கரை பகுதியில் உள்ள குறுஞ்செடிகளை அகற்றுதல் மற்றும் காக்கையன் தோப்பு வம்பாவாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்துதல் பணிகளை பாஜ அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் துவக்கி வைத்தார்.
பின்னர், பொதுமக்களிடம் அமைச்சர் பேசுகையில், ‘மீனவ மக்களாகிய நீங்கள் டிஆர்டிஏ மூலம் விபரங்களை பெற்று அனைவரும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஸ்கில் டெவலப்மெண்ட் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.175 வீதம் மூன்று மாதத்துக்கு அவரவர் வங்கி கணக்கில்செலுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை, சரியாக கூறுபவர்களுக்கு ரூ.1000 பரிசு’ என்று அறிவித்தார். அப்போது ஒரு பெண் எழுந்து, ‘செப்டம்பர் 17ம் தேதி’ என்றார்.
அதற்கு, ‘நீங்கள் எந்த ஆண்டு என்பதை கூறவில்லை. 1950 செப்டம்பர் 17ம் தேதி மோடியின் பிறந்தநாள், நான்தான் சரியான பதிலை கூறினேன். எனவே இந்த ஆயிரம் பரிசு எனக்கே சொந்தம்’ என்று கூறி பணத்தை எடுத்தவர் தன் பாக்கெட்டிலேயே வைத்து கொண்டார். இதனால் அங்கிருந்த பெண்கள் ‘என்ன இது? புதிய பார்முலாவாக இருக்கே அறிவித்தவருக்கே பரிசா?’ என்று கூறி கல, கலவென சிரித்தனர். அமைச்சருக்கு ரூ.1000 ஒன்றும் பெரிய பணம் இல்லை. பரிசை அறிவிப்பதுபோல் அறிவித்து, கொடுக்க மனமில்லாமல் தன்பாக்கெட்டில் போட்டு கொண்டு சென்ற அமைச்சரை அங்கிருந்த பெண்கள் கிண்டலடித்தனர்.