Sunday, September 8, 2024
Home » மோடி சதிவலையில் வீழ்ந்த மாயமான் நிதிஷ்குமார்

மோடி சதிவலையில் வீழ்ந்த மாயமான் நிதிஷ்குமார்

by MuthuKumar

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ கூட்டணியை வீழ்த்த, இந்தியா கூட்டணியை உருவாக்க பாடுபட்டவர், இதற்காக நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டுக்கதவையும் தட்டியவர், ஒன்று சேர்க்கவே முடியாது என்று நினைத்து இருந்த காங்கிரஸ், திரிணாமுல், ஆம்ஆத்மி கட்சிகளை ஒரே மேடையில் அமர வைத்த பெருமைக்குரியவர். ஆமாம், அவர் வேறு யாருமல்ல பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், இப்போது அரசியல் விமர்சகர்களால் மாயமான் என்று அழைக்கப்படும் நிதிஷ்குமார் தான் அவர்.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் எப்பாடு பட்டாவது பா.ஜவை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார். நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளையும் திரட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் 2023 ஜூன் மாதம் 23ம் தேதி முதல் கூட்டத்தை நடத்தி, அதில் 16 கட்சித்தலைவர்களை பங்கேற்க வைத்த பெருமைக்குரியவர். அதை தொடர்ந்து ஜூலை 17,18ம் தேதியில் பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரையும் முன்மொழிந்தவர். ஆனால் இன்று அப்படியே ‘யு டர்ன்’. பிரதமர் மோடியின் மாயவலையில் விழுந்த நிதிஷ்குமார் இன்று இந்தியா கூட்டணிக்கு எதிராக திரும்பியிருக்கிறார். இந்தியா கூட்டணியில் உள்ள மொத்த கட்சிகளும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன.

பா.ஜவுடன் இணைந்து பீகார் முதல்வராக 9வது முறையாக நிதிஷ் பதவி ஏற்று, பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய போது, அதுவரை அவருக்கு துணை முதல்வராக இருந்து, எதிர்க்கட்சி வரிசையில் அப்போது பேசிய லாலுபிரசாத் மகன் தேஜஸ்வி நேருக்கு நேராக முதல்வர் நிதிஷ்குமாரை பச்சோந்தி என்று விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு விடவில்லை. இனியும் ஒரு முறை நிதிஷ் அணி மாறமாட்டார் என்று மோடி உத்தரவாதம் கொடுப்பாரா என்றெல்லாம் அனல் பறக்க கேள்வி எழுப்பினார். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே டெல்லி சென்ற நிதிஷ்குமார், இனிமேல் வாழ்நாள் முழுவதும் மோடியுடன் தான் இருப்பேன் என்று உறுதி அளித்தார்.

பீகார் மாநிலத்தை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்யும் பெருமைக்குரிய நிதிஷ்குமார் அணி மாறியது இது முதல்முறை அல்ல. அவர் பாணியே தனி என்கிற அளவுக்கு அடுத்தடுத்து யாரும் எதிர்பாராத நேரத்தில் லாலு, காங்கிரஸ் கூட்டணியிலும், பா.ஜ அணியிலும் மாறி மாறி சவாரி செய்து வருகிறார். அதனால் தான் மாயமான் நிதிஷ் என்ற பெயரை பெற்றுள்ளார். அதோடு பல்டி மாமா என்றும் அங்கு அவர் அழைக்கப்படுகிறார். மனம்போன போக்கில் கூட்டணி மாறிக்கொண்டிருக்கும் நிதிஷ் குமாரை இப்போது அப்படித்தான் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிக அளவில் முரண்பாடுகளை கொண்ட நிதிஷின் அரசியல் பயணம் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திராகாந்தியை கடுமையாக எதிர்த்தவருமான ஜெயபிரகாஷ் நாராயணன் சீடராக தொடங்கியது. இன்ஜினியரிங் பட்டம் பெற்ற நிதிஷ் கல்லூரி காலத்திலேயே ஜே.பியின் சீடர். இன்னொரு சீடர் லாலு. எமர்ஜென்சியை இந்திராகாந்தி அமல்படுத்தியபோது இருவருமே சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு பீகாரில் லாலுபிரசாத் ஆதிக்கம் தொடங்கியது. 1990 முதல் 2005 வரை லாலு, அவரது மனைவி ராப்ரி தேவிதான் பீகார் முதல்வர்கள். இருவரும் தலா 7 ஆண்டுகள் தாண்டி ஆட்சி செய்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் இணைந்து சமதா கட்சியை தொடங்கினார் நிதிஷ் , தனிக்கட்சி தொடங்கி லாலுபிரிந்ததால் மீண்டும் ஜனதா கட்சியுடன் தனது சமதா கட்சியை இணைத்து ஐக்கிய ஜனதா தளம் என பெயரை மாற்றினார்.

தொடர்ந்து பா.ஜவுடன் நெருங்கி ஒன்றிய அரசில் அமைச்சர் பதவியை வகித்து வந்தார். ஆனாலும் அவருக்கு பீகார் முதல்வராக வேண்டும் என்ற அடிமனதின் ஆசை காரணமாக மாநில அரசியலில் தீவிரமாக களம் இறங்கினார். லாலுபிரசாத் ஆட்சி மீதான அதிருப்தியில் 2005ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து களமிறங்கி பீகாரில் படுதோல்வி அடைந்ததால், தோல்விக்கு பொறுப்பு ஏற்று 278 நாட்கள் முதல்வர் பதவியை தனது கட்சியின் மூத்த உறுப்பினர் ஜித்தன்ராம் மஞ்சியிடம் ஒப்படைத்தார். அந்த 278 நாட்கள் தவிர்த்து இப்போது வரை நிதிஷ்குமார் தான் முதல்வர்.

மோடியை எதிர்த்து 2015ல் பா.ஜ கூட்டணியை விட்டு விலகி லாலு, காங்கிரஸ் அணியுடன் இணைந்து முதல்வரானார். இருப்பினும் சில காலம் கழித்து மீண்டும் பா.ஜ கூட்டணிக்கு சென்றார். 2020 சட்டப்பேரவை தேர்தலையும் பா.ஜவுடன் இணைந்தே சந்தித்தார். அதன்பிறகு திடீரென அந்த கூட்டணியை முறித்து விட்டு, இந்த பக்கம் தாவினார். இப்போது மீண்டும் பா.ஜ பக்கம் தாவியிருக்கிறார் மாயமான் நிதிஷ். எப்போதெல்லாம் முதல்வர் பதவிக்கு ஆபத்து என்று நிதிஷ்குமார் நினைக்கிறாரோ, அப்போதெல்லாம் யாரும் எதிர்பாராத வகையில் எதிரணி பக்கம் சென்று கூட்டணி வைத்து பதவியை தக்கவைத்துக் கொள்கிறார். இப்போது பா.ஜவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்த பிறகும் கூட, நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். அவருக்காக எங்கள் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று லாலுபிரசாத் அழைத்திருக்கிறார் என்றால், நிதிஷின் தன்மை என்ன என்பதை பார்த்துக்கொள்ளலாம்.

இது நிதிஷின் மாறாத குணம். ஆனால் இந்த குணத்தை மோடி பயன்படுத்தி சதி வலையில் வீழ்த்தி, அவரை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டார் என்பது தான் இதில் முக்கியமான விஷயம். உத்தரபிரதேசம்(80 தொகுதிகள்), மகாராஷ்டிரா(48), மேற்குவங்கம்(42) மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக எம்பி தொகுதிகள் கொண்ட மாநிலம் பீகார். அங்கு 40 தொகுதிகள் உள்ளன. நிதிஷ், லாலு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்து இருக்கும் போது, அங்கு பஸ்வான் மகன், பஸ்வான் தம்பி, நிதிஷிடம் இருந்து பிரிந்த மஞ்சி ஆகியோருடன் கூட்டணி வைத்து எதையும் சாதிக்க முடியாது என்பது மோடிக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணியை வலுவிழக்க வைக்கும் தந்திரத்தை பயன்படுத்தி வந்த பிரதமர் மோடி, பீகார் மாநிலத்தில் மட்டும் இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரையே உருவி தங்கள் பக்கம் இணைக்க திட்டமிட்டு இருந்தார்.

அந்த சதிவலையில் நிதிஷ்குமாரும் சிக்கி பா.ஜ பக்கம் போய்விட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இப்போது பா.ஜ+ நிதிஷ்+ பஸ்வான் தம்பி+ பஸ்வான் மகன்+ ஜித்தன்ராம் மஞ்சி ஒரு அணியும், லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்+ காங்கிரஸ்+கம்யூனிஸ்ட்டுகள் ஒருபுறமும் போட்டி கடுமையாக அமையும். இதில் கணிசமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது பா.ஜவின் ஆசை. மோடியின் சதிவலையில் விழுந்த நிதிஷ்குமார் இடம் பெற்ற அணியை பீகார் ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது இன்னும் 3 மாதங்களில் தெரிந்து விடும்.

You may also like

Leave a Comment

6 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi