ஆவடி: அரசு மாதிரிப் பள்ளிக்கு ரூ.1.89 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வார்டு எண் 21, ஆவடி அண்ணாநகர் பகுதியில் சுமார் 200 மாணவ, மாணவியர் பயிலும் அரசு மாதிரிப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பள்ளியில் போட்டித் தேர்வுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு ஜே.இ.இ தேர்வு எழுதி 3 மாணவர்கள் ஐஐடியில் பயில தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மண்டல தலைவர் ஜோதிலட்சுமி, பகுதிச் செயலாளர் நாராயண பிரசாத், பொன் விஜயன், திருமலை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வினோத்குமார், பிரவீன், மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.