இதற்கிடையே அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு பதவியேற்கும் விழாவுக்கு சென்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங், அங்கு உரையாற்றினார். அப்போது, அவரது மனைவியின் ராஜினாமா குறித்து கூறுகையில், `கட்சியின் நலன், நல்ல நோக்கங்களுக்காக என் மனைவி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பதை சிக்கிம் மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். எங்களது கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் வேண்டுகோளின்படி, அவர் எங்கள் கட்சியின் நலனுக்காக தேர்தலில் போட்டியிட்டார். விரைவில் புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்து தொகுதி பயனடைவதை உறுதிசெய்வோம்’ என்றார்.
முன்னதாக கிருஷ்ண குமாரி ராய் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மிகவும் கனத்த இதயத்துடன், நாம்சி-சிங்கிதாங் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலை சமூக நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.
கட்சியின் வேண்டுகோளை ஏற்று தேர்தலில் போட்டியிட்டேன். தற்போது கட்சியின் முடிவை ஏற்று ராஜினாமா செய்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் மனைவி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான உண்மையான காரணம் வெளியாகாத நிலையில், கணவனும் மனைவியும் கட்சியை காரணம் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.