ஐஸ்வால்: மிசோரமின் மாநிலங்களவை எம்பி வான்லால்வெனா தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், ‘‘மிசோரமில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தை சேர்ந்த 1047 காவல் துறையினர் தேர்தல் பணிகளுக்காக பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.
இதனால் அவர்களால் தங்களது வாக்குகளை பதிவு செய்ய முடியவில்லை. பல்ேவறு மாநிலங்களில் தற்போது 15கம்பெனி மிசோரம் ஆயுதப்படை போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் தங்களது உரிமையை பயன்படுத்துவதற்கான நியாயமான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.