டெல்லி : தமிழ்நாட்டில் கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசு நிர்வாகம் அதில் இருந்து விலக வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தெலங்கானாவில் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் இந்து கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். கோவில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அராஜகம் என விமர்சித்த அவர், கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என வலியுறுத்தினார். சிறுபான்மையினர்களின் வழிபாட்டு தளங்களை தமிழக அரசு உட்பட எந்த தென்னிந்திய மாநிலங்களும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராதது ஏன் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாட்டில் கோவில்கள் அரசின் கைகளில் உள்ளன. கோவில்களின் சொத்துகளை அரசு தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.கோவில்களின் சொத்துக்கள் அரசின் துணையுடன் அபகரிக்கப்படுகின்றன.சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களை அவர்கள் தொடுவதில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதில்லை,”என்றார். I.N.D.I.A. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்து கோவில்கள் நிர்வாகத்தில் இருந்து விலகுமாறு தமிழ்நாடு அரசை கூற முடியுமா என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மக்கள் தொகைக்கு ஏற்பட உரிமை தர வேண்டும் என்று கூறும் காங்கிரஸ், கோவில்களை இந்துக்களிடம் அளித்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுமா என்றும் மோடி கேட்டார்.