திருச்சி: திருச்சி மாவட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 31ம் தேதி வருகை தருகிறார். அதன்படி, நாளை மறுநாள்(31ம் தேதி) பிற்பகல் திருச்சிக்கு விமானத்தில் வருகிறார். அங்கு அவருக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து விமான நிலையத்திலிருந்து காரில் சாலை மார்க்கமாக நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இதைதொடர்ந்து சூரியூர் எலந்தைபட்டியில் சிப்காட் மற்றும் ஒலிம்பிக் ஸ்டேடியம் அமையவுள்ள இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் சூரியூரில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அமைச்சர் உதயநிதி பார்வையிடுகிறார்.
இதைதொடர்ந்து 31ம் தேதி மாலை பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணியை பார்வையிடுகிறார். பின்னர் மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்கில் நடைபெறும் விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், நான் முதல்வன் பணி ஆனை வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதைதொடர்ந்து திருச்சி சுற்றுலா மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். ஆகஸ்ட் 1ம் தேதி காலை சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு அந்தநல்லூர் திருப்பராய்த்துறையில் உள்ள பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார். பின்னர் தென்பறைநாடு புத்தூரில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைதொடர்ந்து ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்ஐடியில் சேர்ந்துள்ள சின்ன இலுப்பூர் கோம்பை கிராமத்தில் உள்ள மாணவி ரோகினியை சந்தித்து பாராட்டுகிறார். இதைதொடர்ந்து அன்று மதியம் சுற்றுலா மையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதைதொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். பின்னர் ஈரோடு மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.