பேருந்துகளை மிக கவனமுடன் இயக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை நேற்று பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் சிவசங்கர் பேருந்தினை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்தினை மிகவும் கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில், பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணியிடம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிட ஏதுவாக, இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றைய முன்தினம் அமைச்சர் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேலும், இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஆய்வுக்கு பின் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: கடந்த 9ம் தேதி சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 634 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,37,000 பயணிகளும், நேற்றைய முன்தினம் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 1,822 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 2,29,000 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் 3மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளில் 994 பேருந்துகளும், 1,415 சிறப்புப் பேருந்துகளில் 764 பேருந்துகளும் இயக்கப்பட்டு 87,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆகமொத்தம் 9ம் தேதி முதல் நேற்று மதியம் 3 மணி வரை சென்னையிலிருந்து 8,414 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,53,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இச்சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்திட 2,43,629 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு வாயிலாக ரூ.12 கோடியே 26 லட்சத்து 59 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட இவ்வாண்டு அதிக பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி