அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் வாதிடும்போது, செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளது. அவருடைய வங்கி கணக்குகளையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது என்றார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி ரூ.67 கோடியே 75 லட்சம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. சிறை மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் காட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்கவுள்ளார்.

Related posts

சாட்சி அளிப்பவரின் சாதி, மதம் பதிவு செய்வதை எதிர்த்து வழக்கு: சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவு

நாடு முழுவதும் பள்ளிகள் அருகே குட்கா, கூல் லிப் விற்க தடை: ஒன்றிய அரசு கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி

ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்