அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வருவாயை அடையவும், அரசின் வருவாயை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தினார். சார்பதிவகங்களில் ஆவணப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு ஆவணப் பதிவு முடித்து எந்தவித குறைபாடும் இல்லாத ஆவணங்களை பதிவு நாளன்றே திரும்ப அளிக்க அறிவுறுத்தப்பட்டது. சார்பதிவாளர்களால் பரிசீலனை மற்றும் இதர காரணங்களுக்காக நிலுவை வைக்கப்பட்ட ஆவணங்கள் சீராய்வு செய்யப்பட்டதில் நிலுவை எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைத்திட அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சார்பதிவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான வில்லங்கச் சான்று வழங்குதல், சான்றிட்ட நகல்கள் வழங்குதல் ஆகியவற்றை குறித்த காலத்திற்குள் பொதுமக்களை அலைக்கழிக்காமல் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் நிர்வாக மாவட்ட பதிவாளர்கள் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு இதில் சுணக்கம் ஏற்படாமல் சேவை வழங்குவதை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.