ராயபுரத்தில் நவீன மயமாக்கப்பட்ட பல் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (07.08.2024) பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-63, புதுப்பேட்டை, ஆதித்தனார் சாலையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ், ரூ.1 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட நவீன பல் மருத்துவமனையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்த மருத்துவமனை ரூ.1 கோடி மதிப்பில் சிறந்த நவீன பல் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.35 இலட்சம் மதிப்பில் இந்த மருத்துவமனை கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பல் மருத்துவர், ஒரு ஊடுகதிர் நுட்புநர் மற்றும் ஒரு பல் சுகாதார நிபுணர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டு, நாள்தோறும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை மாநகராட்சிகளில் செயல்படும் மற்ற பல் மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் பல் ஊடுகதிர் பரிசோதனை மையமாக இந்த மருத்துவமனை செயல்படும்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், மேயர் திருமதி ஆர். பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள் திரு. நே. சிற்றரசு (பணிகள்), டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), மண்டலக்குழுத் தலைவர் திரு. எஸ். மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் திரு. சிவ ராஜசேகரன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு