சென்னை : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதனின் பதவிக்காலம், இம்மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன்படி தேடுதல் குழுவில் இடம்பெற வேண்டிய, சிண்டிகேட் மற்றும் செனட் பிரதிநிதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்து அனுப்பி வைத்துள்ளது. இதனிடையே தேடுதல் குழு அமைக்க, ஆளுநர் மாளிகை திட்டமிட்டே தாமதம் செய்து வருவதாக தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்க ஆளுநர் முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,”சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் . உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. தமிழக அரசு இதில் கவனமாக செயல்பட்டு வருகிறது. ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.