Friday, June 28, 2024
Home » 6 புதிய பட்டயப் படிப்புகள் , மாணவியருக்கு தனி ஓய்வறை, மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகங்கள் : புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி!!

6 புதிய பட்டயப் படிப்புகள் , மாணவியருக்கு தனி ஓய்வறை, மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகங்கள் : புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி!!

by Porselvi

சென்னை :புதிதாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு..

*அச்சுதொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 2025-26 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப் படுத்தப்படும்.

*கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் ரூ.21 கோடியில் ஆண்கள் விடுதி கட்டடம் கட்டப்படும்.

*ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் ரூ.14 கோடியில் கூடுதல் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.

*சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.

*கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

*ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் மாணவியருக்கு தனி ஓய்வறை கட்டிடம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் அமையும். தனி ஓய்வறை தலா ரூ.5 லட்சம் வீதம் 171 கல்லூரிகளில் கட்டப்படும்.

*ரூ. 3 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம் கோயம்புத்தூர்,சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.பலவிதமான பயிற்சி திட்டங்கள் பட்டறைகள் (workshops) மற்றும் படிப்புகளை வழங்கும்.

*ரூ.3 கோடி மதிப்பீட்டில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகங்கள் திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் தலா ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.மின்சார வாகன மின்கலன்கள் மற்றும் மின்கல மேலாண்மை அமைப்புகள், மின்னேற்றி, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், பொருட்களின் இணையம் மற்றும் தானியங்கி வாகன மின்னணுவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துரிதப்படுத்தப்படும்.

*காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் (Internet of Things Laboratory), ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

*பொருள் சேர் உற்புத்தி ஆய்வகங்கள் [ Additive Manufacturing Laboratory }வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

*ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் போட்டித்தேர்வுளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பொறியியல் பட்டதாரிகளின் முதுகலை படிப்பை ஊக்குவிக்கவும்,வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தவும் ஒரு மாணாகர்களுக்கு ரூ. 8500 ஒதுக்கப்படும்.GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும்.

*2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் துவங்கப்பட்ட 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலிருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றிற்க்கு கொள்முதல் செய்யப்படும்.ஆசிரியர்கள், மாணாக்கர்களுக்கு ஆகியோருக்கு இருக்கைகள், வகுப்பறைகளுக்கு செராமிக் கரும்பலகைகள் ஆகிய தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.

*தொழில்நுட்ப கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்த ரூ.2 கோடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

You may also like

Leave a Comment

nine + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi