திருமலை: ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், பெத்தஞ்சேர்லா மண்டலம் கனுமகிந்தா கொட்டாலா என்ற கிராமத்தில் ஏராளமான குகைகள் உள்ளன. இவற்றை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற ஆந்திர அரசு முடிவு செய்தது. அதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிதியமைச்சர் ராஜேந்திரநாத் இந்த குகைகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட திட்டமிட்டார். அதன்படி அதிகாரிகள், போலீசாரும் அங்கு சென்றனர். அவர்களுடன் மக்கள் பிரதிநிதிகளும் சென்றனர். அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், இப்பணிகளை மேலும் விரைவுபடுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அங்குள்ள ஒரு மரத்தடியில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அருகே உள்ள குகைகளில் இருந்த தேனீக்கள் திடீரென பறந்துவந்து அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டவர்களை விரட்டி கொட்டியது. மார் 70க்கும் மேற்பட்டோர் தேனீக்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக பெத்தஞ்சேர்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஊராட்சி செயலாளர் சுவாமி நாயக் மேலும் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.