சென்னை : தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவரப்படுமா? என்ற கேள்விக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர், “தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். மதுபழக்கத்தில் இருந்து மக்களை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. முதல்வர் வெளிநாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் நடப்பவற்றை தொடர்ந்து கவனித்து வருகிறார். மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்றே முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இங்குள்ள சூழலை பொறுத்து தான், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் .
திமுக அரசை எதிர்த்து விசிக மாநாடு நடத்தவில்லை, கொள்கை ரீதியான முடிவுக்காக நடத்துகின்றனர். விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பை தான் திருமாவளவன் விடுத்துள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்க கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். மதுக்கடைகளை மூடும் கடுமையான சூழலை நிதானமாக அணுக வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.