நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களின் தகுதி பட்டியல் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு


சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 2024-25ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.00 மணி வரை www.tnmedicalselection.org என்கின்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவேற்றலாம். அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கிய பிறகுதான் மாநிலங்கள் 85% மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தவேண்டும். அந்தவகையில் ஆகஸ்ட் 14ம் தேதி ஒன்றிய அரசு கலந்தாய்வு தொடங்குகின்ற நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதி தமிழ்நாட்டில் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான தகுதி பட்டியல் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.

ஆகஸ்ட் 21ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியவுடனேயே 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு பட்டியல், முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியல், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகின்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய நாட்களில் நேரடியாக நடத்தப்பட உள்ளது. பின்னர் பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்றார்.

எத்தனை இடங்கள்?
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5050 இடங்களும், ஒரு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3,400 இடங்களும், 3 மாநில தனியார் பல்கலைக்கழகங்க மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்களும், ஆகமொத்தம் 9050 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்) பொறுத்தவரை 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1,950 இடங்களும், ஆகமொத்தம் 2,200 இடங்கள் உள்ளன. இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கு 851 இடங்களும், பி.டி.எஸ் படிப்பை பொறுத்தவரை 38 இடங்களும் ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்