சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கூட தாண்ட வாய்ப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன், மழைக்கு முன்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2898.89 கோடி செலவில், 878.78 கி.மீ நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. டெங்கு பாதிப்பு ஒவ்வோர் ஆண்டும் 5000 முதல் 10,000 வரை ஏற்படும். 2012 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தான் டெங்கு வரலாற்றிலேயே அதிகமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5000க்குள் தான் உள்ளது. மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 400. 4 பேர் பலியாகியுள்ளனர். நவம்பர், டிசம்பர் மாதம் முடிவதற்குள், டெங்கு பாதிப்பு 6000 கூட தாண்ட வாய்ப்பில்லை.