தாம்பரம்: திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்லாவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில், காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் ஏற்பாட்டில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று பல்லாவரம் தர்கா சாலையில் நடந்தது.
இதேபோல், தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில், இளைஞரணி அமைப்பாளர் சத்திய பிரபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் பம்மல் பகுதியில் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுடன் ஒரு தொகுதிக்கு, 10 ஆயிரம் இளைஞர்களை சேர்த்து விட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி இளைஞரணி நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் அவர் சொன்னதை விட அதிகமானவர்களை சேர்த்து இன்று இந்தியாவில் 50 லட்சம் இளைஞர்களை கொண்ட ஒரே இயக்கம் திமுக தான். எப்படி தலைவர் கழகத்திற்கு பக்கபலமாக இருந்து, இந்த இயக்கத்தை வழி நடத்துகிறாரோ, அதேபோல தலைவருக்கு பக்கபலமாக இருந்து இந்த இயக்கத்தை கட்டுக்கோப்புடன் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்ற இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். எனவே, இளைஞர் அணியை சேர்ந்த தம்பிகள் அவர் சொல்லும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் இ.எஸ்.பெர்னார்ட், ஏ.கே.கருணாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல, தாம்பரம் மாநகர திமுக சார்பில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் சானடோரியம் பகுதியில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உணவு வழங்கினார். அப்போது, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கேம்ப் ரோடு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசுப்பிரமணியன் ஏற்பாட்டில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.