நாகர்கோவில்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்து பேசிய உ.பி சாமியார் மீது தமிழ்நாடு முழுவதும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, இந்துக்களுக்கு எதிராக பேசியதாக பாஜவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ₹10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அறிவித்துள்ளார்.
வன்முறையை தூண்டும் வகையிலும், மக்களிடையே மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன் தலைமையில் திமுகவினர் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திலும், நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் வடசேரி காவல் நிலையத்திலும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் மதுரை போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு இடங்களில் சாமியார் மீது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, அந்தியூர், திண்டிவனம், ஆண்டிப்பட்டி, சேலம், குடியாத்தம் உள்ளிட்ட பல இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் சாமியாரின் உருவப்படம் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.