இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார். இன்றும், நாளையும், மார்ச் 5ம் தேதியும் விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6ம் தேதிகளிலும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8ம் தேதிகளிலும் நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.