கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு நேற்று நண்பகல் 12:53 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறுகையில், ‘அஞ்செட்டி அருகிலுள்ள வனப்பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், 5 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அப்பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். லேசான நில அதிர்வு என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் நில அதிர்வை யாரும் உணர முடியவில்லை. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை,’ என்றார்.