சென்னை: மிலாது நபியை முன்னிட்டு வரும் 17ம் தேதியை அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மிலாது நபியை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை தினமாக அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி பிறை தென்படவில்லை.
எனவே, செப்டம்பர் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மிலாது நபி கொண்டாடப்படும் என்றும் தலைமை காஜி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி செப்டம்பர் 16ம் தேதிக்கு பதிலாக, செப்டம்பர் 17ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறை அனைத்து மாநில அரசு நிறுவனங்கள், கார்ப்பரேசன்கள், போர்டுகள் போன்றவற்றுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.