திருப்போரூர்: கடந்த 4ம் தேதி வீசிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தையூர் ஏரியில் இருந்து வெளியான உபரிநீரால் ஓஎம்ஆர் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய அரசின் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டது. தையூர் ஓஎம்ஆர் சாலைக்கு வந்த குணால் சத்யார்த்தி தலைமையிலான குழுவினரிடம் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் வெள்ள சேதம் ஏற்பட்ட பகுதிகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் காட்டினர். அவற்றை பார்வையிட்ட குழு, பின்னர் ஓஎம்ஆர் சாலை மற்றும் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்றது.