மிக்ஜாம் புயல் எச்சரிக்கை எதிரொலி தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்: உணவு, பால், மருந்து கையிருப்பு அவசியம்

சென்னை: மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால், மருந்துகளை ஒரு சில நாட்களுக்கு கையிருப்பில் வைக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்

* அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்

* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்

* முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.

* கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), அவசர விளக்கு (emergency light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரை பறந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.

* கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.

* ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்பி எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

* மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

* புயல் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுகொள்ளப்படுகிறது.

* அவசர உதவிக்கு மாநில அவசரகால செயல்பாட்டு மையம்-1070, வாட்ஸ் அப் எண்- 94458 69848, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம்-1077 என்ற எண்ணை பின்பற்றலாம். இந்த எச்சரிக்கையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மீனவர்களுக்கு எஸ்எம்எஸ்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செல்போன் எஸ்எம்எஸ் வழியாக வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60 முதல் 70 கி.மீ.க்கு பலத்த காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில், நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Related posts

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!