மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (4.12.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.

உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் ஒன்றிய அரசிடம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related posts

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்